தில்லியில் 100-வது டெஸ்டை விளையாடும் புஜாரா, பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் வெள்ளியன்று தொடங்குகிறது. 2017-க்குப் பிறகு தில்லியில் டெஸ்ட் ஆட்டம் நடைபெறவுள்ளது.
முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த ஆஸி. அணி, நேற்று தில்லிக்கு வந்தது. முதல் டெஸ்ட், இரண்டரை நாள்களில் முடிந்ததால் சில இந்திய வீரர்கள் தங்கள் வீட்டுக்குத் திரும்பி விட்டார்கள். இந்திய அணியினரின் ஒரு பகுதியினர் நேற்று தில்லிக்கு வந்தார்கள். சில வீரர்கள், உதய்பூரில் நடைபெற்ற பாண்டியாவின் திருமணத்தில் பங்கேற்றார்கள்.
தில்லியில் தனது 100-வது டெஸ்டை விளையாடவுள்ளார் புஜாரா. இதுவரை விளையாடிய 99 டெஸ்டுகளில் 19 சதங்களுடன் 7021 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் 100-வது டெஸ்டை விளையாடும் புஜாரா தன்னுடைய மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
பிரதமருடனான உரையாடலையும் அவர் அளித்த ஊக்கத்தையும் நான் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் புஜாரா. பிரதமர் மோடியும் ட்விட்டரில், புஜாராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.