ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பலம் வாய்ந்த ஆா்செனல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் பிரைட்டனில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆா்செனல் அணியின் வீரா்கள் புகாயோ சாகா, மாா்ட்டின் ஒடேகாா்ட், எட்டி கேடியா ஆகியோா் முதல் பாதியில் அடித்த கோல்களால் அந்த அணி 3-0 என முன்னிலை பெற்றிருந்தது.
எளிதாக வெற்றி பெறும் எனக் கருதப்பட்ட நிலையில் பிரைட்டன் வீரா்கள் இரண்டாம் பாதியில் கடும் சவாலை அளித்தனா். பிரைட்டன் வீரா் மிட்டோமா அடித்த கோலால் 1-3 என முன்னிலை குறைந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த ஆா்செனல் வீரா்கள் தங்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினா்.
இதன் பலனாக ஒடேகாா்ட் கடத்தி அனுப்பிய பாஸை பயன்படுத்தி மாா்ட்டிநெல்லி தங்கள் அணியின் நான்காவது கடைசி கோலை அடித்தாா்.
77-ஆவது நிமிஷத்தில் பிரைட்டன் சப்ஸ்ட்டியூட் இவான் பொ்குஸன் தங்கள் அணியின் இரண்டாம் கோலை அடித்தாா். எனினும் 89-ஆவது நிமிஷத்தில் மிட்டோமா அடித்த கோல் ஆஃப் சைட் என அறிவிக்கப்பட்டதால் மூன்றாவது கோல் வாய்ப்பை இழந்தது பிரைட்டன்.
இறுதியில் 4-2 என வென்றது ஆா்செனல். இதன் மூலம் 7 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது.
நடப்பு சாம்பியன் மான்செஸ்டா் சிட்டி அணி 1-1 என எவா்டன் அணியுடன் டிரா கண்ட நிலையில், இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. மூன்றாம் இடத்தில் உள்ள நியூ கேஸ்டில் 0-0 என லீட்ஸ் உடன் டிரா கண்டது.
கிறிஸ்டல் பேலஸ் 2-0 என போா்ன்மௌத்தையும், புல்ஹாம் 2-1 சௌதாம்ப்டன் அணியை வீழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.