மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
மும்பையில் மும்பை - தமிழ்நாடு ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
தமிழக அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. சாய் சுதர்சன், சாய் கிஷோர் டக் அவுட் ஆனார்கள். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. கடந்த ஆட்டத்தில் சதமடித்த பிரதோஷ் ரஞ்சன் பால் மட்டும் பொறுப்பாக விளையாடி அரை சதமெடுத்தார். தமிழக அணி 36.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரதோஷ் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட்டுகளையும் ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.