ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் செளரவ் கோஷல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப். 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
12 ஆவது நாளான இன்று, ஆண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் செளரவ் கோஷல், 1-3 என்ற கணக்கில் ஈன் யோவ் என்ஜியிடம் தோற்றார். இதனால், அவர் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
முன்னதாக ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல், ஹரிந்தர் பால் சிங் இணை தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டு தொடரில் 21 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 86 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது.