டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேர்வுக்கான போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினர்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேர்வுக்கான போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோ சினிமாவில் கிரீம் ஸ்மித் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் நேற்றையப் போட்டியில் ராகுல் மற்றும் சாம்சன் இருவருமே பார்ட்னர்ஷிப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ராகுல், தீபக் ஹூடாவுடன் பார்ட்னஷிப் அமைத்தார். சஞ்சு சாம்சன், துருவ் ஜுரெலுடன் பார்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார். இதில் வித்தியாசம் என்னவென்றால் சஞ்சு சாம்சன் ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். கே.எல்.ராகுல் அணிக்கு ரன்கள் குவித்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேர்வுக்கான போட்டியில் இந்த இரண்டு வீரர்களும் இருப்பது சிறப்பான விஷயம் என்றார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.