

இந்தியா-இலங்கை மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி பிரேமதசா மைதானத்தில் நடைபெற்றது. 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.
26.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 110 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
இந்த வரலாற்று தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
சுழல் பந்து பிரச்னையாக இருந்ததாக நினைக்கவில்லை. அணியின் திட்டமிடலாகவும் தனித்தனி வீரர்களின் குணாம்சமாகவும் பார்க்க வேண்டும். (உலகக் கோப்பை வெற்றியால் தன்னிறைவு அடைந்து விட்டதா என்ற கேள்விக்கு) அது நகைச்சுவை, நீங்கள் இந்தியாவுக்காக விளையாடும்போது ஒருபோதும் மனநிறைவுடன் இருக்கப்போவதில்லை. நான் கேப்டனாக இருக்கும்வரை அது நடக்க வாய்ப்பில்லை. அதே சமயம் நல்ல விளையாட்டுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இலங்கை எங்களைவிட நன்றாக விளையாடியது.
சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி நாங்கள் அணியை தேர்வு செய்தோம். இந்தத் தொடரில் நேர்மறையாக எதுவும் எடுக்க முடியாது. மாறாக பல இடங்களில் நாங்கள் முன்னேற வேண்டும். அடுத்தமுறை இந்த மாதிரி சூழ்நிலைகளில் விளையாட வரும்போது சிறப்பான திட்டமிடல் வேண்டும்.
தோல்வி என்பது நடக்கக்கூடியதுதான். இந்தத் தொடரை இழப்பதால் உலகம் இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. இங்கு அங்கு என சில தொடர்களை இழப்பது நடக்கும். ஆனால் இதிலிருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதே முக்கியம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.