
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 6-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர்.
14 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இந்தத் தொடரின் முதல் சுற்றில் டிங் லிரேனும் மூன்றாவது சுற்றில் குகேஷும் வெற்றி பெற்றனர். இரண்டாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.
நேற்று (நவ. 30) நடைபெற்ற 5-வது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடிய குகேஷ் கடும் சவாலுக்கு பின் ஆட்டத்தை டிராவில் முடித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற 6-வது சுற்றில் குகேஷ் கருப்பு காய்களில் ஆடினார்.
ஆட்டத்தின் போது இருவருமே சில நகர்த்தல்களுக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். அதில், இருமுறை லிரேன் காய் நகர்த்தலுக்குப் பிறகு தலையை ஆட்டி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
21-வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்வதைப் போன்ற நகர்த்தலை இருவரும் மேற்கொண்டனர். ஆனால், குகேஷ் அதனைத் தவிர்த்துவிட்டார். குகேஷ் இந்த சுற்றில் பல ரிஸ்க்குகளை எடுத்தார்.
இறுதிவரை டிரா செய்வதை குகேஷ் தவிர்க்க முயன்றார். ஆனால், லிரேன் டிரா செய்ய முயன்று கொண்டிருந்தார். இறுதியில் மூன்று முறை ஒரே நகர்த்தலை மேற்கொண்டு ஆட்டத்தை டிராவில் முடிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.
46-வது நகர்வில் 6-வது சுற்றும் டிராவில் முடிந்தது. தொடர்ந்து 3 சுற்றுகள் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
குகேஷ் ஆட்டத்தில் காய் நகர்த்தல் குறித்து யோசிப்பதற்கு எப்போதும் தியானிப்பது போல தனது கண்களை மூடி யோசனை செய்வார். இந்தமுறை, ஆட்ட நேரத்தில் குகேஷ் 4% நேரத்தை கண்களை மூடி செலவிடுவதாக போட்டி நடத்துபவர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இந்தத் தொடரின் 7-வது ஆட்டம் டிச. 3 அன்று நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.