மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாகக் கைப்பற்றியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், இன்று (பிப்ரவரி 6) மூன்றாவது போட்டி நடைபெற்றது.
இதையும் படிக்க: அணியில் இடம்பெற இஷான் கிஷன் இதனை செய்ய வேண்டும்: ராகுல் டிராவிட்
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 86 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரரான அலிக் அதனாஸ் 32 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆடம் ஸாம்பா மற்றும் லான்ஸ் மோரிஸ் தலா 2 விக்கெட்டுகளையும், சீன் அப்பாட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
87 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6.5 ஓவர்களில் அதிரடியாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜேக் ஃப்ரேசர் 41 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து ஜோஷ் இங்லிஷ் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவியர் பார்ட்லெட் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.