விராட் கோலி தொடர்பாக தவறான தகவலை தெரிவித்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை என இந்திய அணியின் விராட் கோலி தெரிவித்திருந்தார். தற்போது அவர் இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில், விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், விராட் கோலி தொடர்பாக தவறான தகவலை தெரிவித்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது: குடும்பத்துக்கு முக்கியத்தும் அளிப்பது முதன்மையாக இருக்க வேண்டும் என எனது யூடியூப் சேனலில் கூறியிருந்தேன். அந்த விடியோவில் விராட் கோலி குறித்து தவறான தகவலைத் தெரிவித்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன். நான் கூறியத் தகவல் உண்மை கிடையாது. விராட் கோலி விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அவர் எந்த காரணத்துக்காக விடுப்பு எடுத்திருந்தாலும், அவர் மீண்டும் வலிமையாக திரும்பி வருவார் என நம்புகிறேன் என்றார்.