இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து அறிமுக வீரர் சர்ஃபராஸ் கான் அதிரடியாக 62 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரிஹான் அகமது 2 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இங்கிலாந்து தங்களது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸாக் கிராலி 15 ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும், பென் டக்கெட் மற்றும் ஆலி போப் இணை சிறப்பாக விளையாடியது. தொடக்கம் முதலே பென் டக்கெட் தனது அதிரடியான பேட்டிங்கால் இந்திய பந்துவீச்சாளர்களை பென் டக்கெட் திணறடித்தார். அதிரடியாக விளையாடிய அவர் சதம் விளாசி அசத்தினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்துள்ளது. பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஸ்வின் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்தியாவைக் காட்டிலும் இங்கிலாந்து 238 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.