வற்புறுத்தி எந்த ஒரு விஷயத்தையும் செய்ய வைக்க முடியாது என இந்திய அணியின் விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட விரும்பவில்லையென்றால், அவர்களை வற்புறுத்தி எந்த ஒரு விஷயத்தையும் செய்ய வைக்க முடியாது எனவும், உள்ளூர் போட்டிகளுக்கு அனைத்து வீரர்களும் போதுமான அளவு மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிசிசிஐ-ன் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் தவிர்க்கப்பட்ட பிறகு சஹா இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மத்திய ஒப்பந்தம் என்பது பிசிசிஐ-ன் முடிவு. அதேபோல உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் இருப்பது சம்பந்தப்பட்ட வீரர்களின் தனிப்பட்ட முடிவு. கட்டாயப்படுத்தி எந்த ஒரு விஷயத்தையும் செய்யவைக்க முடியாது. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் கிளப் போட்டிகளில் விளையாடுகிறேன். ஆபீஸ் போட்டிகளில் விளையாடுகிறேன். நான் எப்போதும் போட்டியை போட்டியாகப் பார்க்கிறேன். அனைத்துப் போட்டிகளுமே எனக்கு சமமானவையே. அனைத்துப் போட்டிகளையும் சமமாக கருதினால் மட்டுமே கிரிக்கெட் பயணத்தில் ஒருவர் சிறந்து விளங்க முடியும்.
உள்ளூர் போட்டிகள் எப்போதும் முக்கியமானவை. சர்ஃபராஸ் கான் கடந்த 4-5 ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் அதிக அளவிலான ரன்கள் குவித்துள்ளார். துருவ் ஜுரல் அற்புதமாக விளையாடி வருகிறார். அவரை உள்ளூர் போட்டிகளில் நான் பார்த்ததே கிடையாது. அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவியதோடு ஆட்டநாயகனாகவும் அவர் தேர்வானார். இந்திய அணியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்றார்.