இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் மழையால் முடிவு கிடைக்கவில்லை. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 8) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது. அந்த அணி 44.4 ஓவர்களில் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கிரைக் எர்வின் 82 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இலங்கை தரப்பில் மஹீஸ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். துஷ்மந்த சமீரா மற்றும் ஜெஃப்ரே வாண்டர்சே தலா 2 விக்கெட்டுகளையும், தில்ஷன் மதுஷங்கா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.