ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இளம் வீரர்கள் அடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி வரலாறு படைத்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி காபாவில் தொடங்கியது. போட்டியின் மூன்றாம் நாளான நேற்று மேற்கிந்தியத் தீவுகள் ஆஸ்திரேலிய அணிக்கு 216 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 156 ரன்கள் தேவைப்பட்டன.
இதையும் படிக்க: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து: வெற்றி பெறுமா இந்தியா?
இந்த நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் சமன் செய்தது.
இந்த வெற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஏன் முக்கியம்?
கடந்த 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சமனில் முடிவடைந்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் 1992-93 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் தோற்கடிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளது.