சுழற்பந்துவீச்சாளர்களை மட்டும் கொண்ட அணியை களமிறக்கவும் அஞ்சமாட்டோம்: இங்கிலாந்து பயிற்சியாளர்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களை மட்டும் கொண்ட இங்கிலாந்து அணியுடன் களமிறங்கவும் அஞ்சமாட்டோம் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அறிமுக வீரராக களமிறங்கிய டாம் ஹார்ட்லி இந்திய அணிக்குப் பெரும் தலைவலியாக மாறினார். அவரது அபார பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் டாம் ஹார்ட்லி. ஆலி போப்பின் அதிரடியான பேட்டிங் மற்றும் டாம் ஹார்ட்லியின் அபார பந்துவீச்சு இங்கிலாந்து அணிக்கு வெற்றியைக் கொடுத்தது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களை மட்டும் கொண்ட இங்கிலாந்து அணியுடன் களமிறங்கவும் அஞ்சமாட்டோம் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருந்தால் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் அடங்கிய இங்கிலாந்து அணியுடன் களமிறங்கவும் அஞ்சமாட்டோம். சோயிப் பஷீர் எங்களுடன் அபு தாபி பயிற்சி முகாமில் பயிற்சி மேற்கொண்டார். அவரது திறமை எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அவர் அணியில் இடம்பெற்று விளையாடுவதற்குத் தயாராக இருக்கிறார் என்றார்.