
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் டிராவிட்டுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு பெற்றது. அவரது பதவிக்காலத்தில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் டிராவிட்டுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய அணியின் கேப்டனாக உங்களுடன் இணைந்து நேரத்தினை செலவிடும்போது, அவர்தான் (ராகுல் டிராவிட்) உங்களுடைய வேலைநேர மனைவி என எனது மனைவி ரித்திகா கூறுவார். அவர் அப்படி கூறுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். உங்களைப் பற்றிய எனது உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், சரியான வார்த்தைகளால் எனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
நீங்கள் மிகவும் சிறந்த நபர். உங்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்களது கோடிக்கணக்கான ரசிகர்களைப் போலவே, நானும் என்னுடைய சிறுவயதிலிருந்தே உங்களை வியந்து பார்த்து வந்தேன். ஆனால், உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். நாம் ஒன்றாக இணைந்து உலகக் கோப்பையை வென்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களை எனது பயிற்சியாளர், நண்பர் எனக் கூறிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்பட ராகுல் டிராவிட் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.