வங்கதேசத்துக்கு எதிராக செப்டம்பரில் தொடங்கவுள்ள தொடரில் முகமது ஷமி இந்திய அணியுடன் இணைய வாய்ப்புள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு முகமது ஷமி காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை. கணுக்கால் காயம் காரணமாக அண்மையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அவர் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக இந்த ஆண்டு ஜூனில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஷமி இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிராக செப்டம்பரில் தொடங்கவுள்ள தொடரில் முகமது ஷமி இந்திய அணியுடன் இணைய வாய்ப்புள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக இந்தியாவில் வருகிற செப்டம்பரில் நடைபெறவுள்ள தொடரில் அவர் இந்திய அணியுடன் இணைய வாய்ப்புள்ளது என்றார்.
இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.