சர்வதேச டி20 போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்குவது மகிழ்ச்சியளிக்கவில்லை என பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிகழும் குழப்பங்கள் அனைத்தும் பாபர் அசாம் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகே நடைபெறுகின்றன.
இந்த நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்குவது மகிழ்ச்சியளிக்கவில்லை என பாபர் அசாம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் நான் மூன்றாவது வீரராக களமிறங்கினேன். அப்போது அது பாகிஸ்தான் அணியின் கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கையை பாகிஸ்தானுக்காக ஏற்றேன். தனிப்பட்ட வீரராக எனது விருப்பத்தைக் கேட்டிருந்தால், மூன்றாவது வீரராக களமிறக்கப்படும் முடிவு எனக்கு மகிழ்ச்சியளித்திருக்காது. இருப்பினும், பாகிஸ்தான் அணிக்காக அந்த முடிவை ஏற்றுக்கொண்டேன் என்றார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் இயக்குநர் முகமது ஹபீஸ் மற்றும் புதிய கேப்டன் ஷகீன் ஷா அஃப்ரிடி இருவரும் இணைந்து அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.
முன்னதாக, பாகிஸ்தான் அணியின் இந்த முடிவுக்கு தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வானும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.