கோப்பையை விட விராட் கோலியின் சாதனைகள் மிகப் பெரியது என ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ அணி, இறுதிப்போட்டியில் தில்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டு இரண்டாவது சீசனிலேயே ஆர்சிபி கோப்பையை வென்றுள்ளது. ஆனால், ஐபிஎல் தொடரில் 16 சீசன்களாக விளையாடியும் ஆர்சிபி அணியால் கோப்பையை வசமாக்க முடியவில்லை.
இந்த நிலையில், கோப்பையை விட விராட் கோலியின் சாதனைகள் மிகப் பெரியது என ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கோப்பையை வெல்வது என்பது விளையாட்டின் ஒரு பகுதியே. ஆனால், விராட் கோலி இந்திய அணிக்காக படைத்துள்ள சாதனைகள் பிரமிக்க வைப்பதாக உள்ளது. அதனால் எனது கிரிக்கெட் பயணத்துடன் அவருடைய கிரிக்கெட் பயணத்தையும், சாதனைகளையும் ஒப்பிடுவது சரியாகாது. ஒப்பிடூகளை விரும்பாததற்கு காரணம், அவர் செய்துள்ள சாதனைகள் மிகப் பெரியது. அவர் எங்களுக்கெல்லாம் ஊக்கமளிப்பவராக இருக்கிறார். ஒரு கோப்பை எல்லாவற்றையும் முடிவு செய்துவிடாது. விராட் கோலியின் மீது எங்கள் அனைவருக்கும் மிகுந்த மரியாதை உள்ளது என்றார்.