இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு ஆஸி. அணியை மிட்செல் மார்ஷ் வழிநடத்துகிறார். சமீபத்தில் 15 பேர் கொண்ட அணியை ஆஸி. அறிவித்தது. இதில் ஸ்மித், ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் இடம்பெறவில்லை.
அஸ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லீஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா ஆகியோர் ஆஸி. அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ஆஸி அணியைச் சேர்ந்த இளம் வீரர் (22) ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் அதிரடியாக விளையாடி கவனம் பெற்றுள்ளார். 259 ரன்கள் 233.33 ஸ்டிரைக் ரேட் என பேட்டிங்கில் அசத்தி வருகிறார். இவரை டி20 உலகக் கோப்பை அணியில் எடுக்காதது ஏன் என ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியதாவது:
ஜேக்கி அற்புதமான திறமைசாலி. ஐபிஎல் தொடரில் ஒரு புயலினை போல் வந்துள்ளார். அவரை எல்லோருக்கும் பிடிக்கிறது. தில்லி மக்களுக்கு அவரை மிகவும் பிடித்துள்ளது. தில்லி அணிக்கு அவர் என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பது மிகவும் மகிழ்ச்சியானது. அவர் எங்கு விளையாடினாலும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
ஒரு அணியாக தற்போது எல்லா பக்கத்தினையும் நாங்கள் நிரப்பிவிட்டோம். வார்னர், டிராவிஸ் ஹெட் எங்களுக்கு சிறப்பாக விளையாடியுள்ளார்கள். கடைசி 18 மாதங்கள் இவர்கள் எங்களுக்கு சிறப்பாக விளையாடியுள்ளார்கள். சரியான 15 பேர் கொண்ட அணியாக நாங்கள் இருப்பதாக கருதுகிறோம். இது எங்களை டி20 உலகக் கோப்பையின் இறுதிக்கு கொண்டுசெல்லும் என நம்புகிறோம்.
விரைவில் புகழடைந்துள்ளார் ஜேக் மெக்கர்க். இளம் வயதிலேயே மிகப்பெரிய திறமை அடையாளம் காணப்பட்டுள்ளது. பிபிஎல் போட்டியிலேயே அதற்கான முன்னோட்டத்தினை பார்த்தோம். ஐபிஎல் சற்று கடினமான தொடர். அவர் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டார். அதுதான் அவரது விளையாட்டு பாணி. அவருக்கான எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றார்.