இலங்கை - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: முதல் சதத்தைப் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் வீரர்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸத்ரன் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.
ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் 91 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் விஸ்வா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 439 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் மேத்யூஸ் மற்றும் சண்டிமால் சதமடித்து அசத்தினர். மேத்யூஸ் 141 ரன்களும், சண்டிமால் 107 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் ஸத்ரன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நிஜத் மசூத் மற்றும் குவாய்ஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. இப்ராஹிம் ஸத்ரன் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இப்ராஹிம் ஸத்ரன் 101 ரன்களுடனும், ரஹ்மத் ஷா 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: இருவர் சதம்; வலுவான நிலையில் நியூசிலாந்து!
ஆப்கானிஸ்தான் அணி இலங்கையைக் காட்டிலும் 42 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.