மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பையின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதல் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க | சவாலை வெல்லுமா தெ.ஆ. அணி?: 143 ரன்கள் எடுத்த மே.இ. தீவுகள்
144 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களாக பவுமா மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் களமிறங்கினர். பவுமா 2 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதன்பிறகு ஹென்ட்ரிக்ஸுடன் ராஸி வான்டர் டூசன் இணைந்து பாட்னர்ஷிப் அமைத்தார்.
ஹென்ட்ரிக்ஸ் ரன் ரேட்டை உயர்த்தும் வகையில் துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
39 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் அகீல் ஹொசைன் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய எய்டன் மார்கிரம் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு தென் ஆப்பிரிக்க வெற்றியை எளிதாக்கினார். இதனால், டூசனின் நிதான ஆட்டம் தென் ஆப்பிரிக்காவுக்கு சிக்கலை உண்டாக்கவில்லை.
18.2 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டூசன் 51 பந்துகளில் 43 ரன்களும், மார்கிரம் 26 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி க்ரூப் 2 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.