
பயிற்சியாளராக இப்படியொரு நிலையை சந்தித்ததில்லை என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவில்லை. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததும்,அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். பாகிஸ்தான் அணிக்குள் வீரர்கள் மூன்று பிரிவுகளாக செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையில்லை எனவும், தனது நீண்டகால பயிற்சியாளர் வாழ்க்கையில் இப்படியொரு சூழ்நிலையை ஒருபோதும் சந்தித்ததில்லை எனவும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையில்லை. அவர்கள் தங்களை அணியென அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அணியாக இணைந்து செயல்படுவதில்லை. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பதில்லை. அனைவரும் தனித்தனியாக இருக்கின்றனர். பல அணிகளுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எனது பயிற்சியாளர் வாழ்க்கையில் ஒருபோதும் சந்தித்ததில்லை என்றார்.
அண்மையில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.