கிடப்பில் போலுப்பள்ளி தொழிற்பேட்டை: தொழில் முனைவோர் ஏமாற்றம்

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே போலுப்பள்ளி கிராமத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தொழில் முனைவோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். போ
Updated on
1 min read

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே போலுப்பள்ளி கிராமத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தொழில் முனைவோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

போலுப்பள்ளி கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என 2006-ல் தமிழக அரசின் சிட்கோ நிறுவனம் அறிவித்தது.

இதற்காக தொழில் முனைவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட சிறுதொழில் முனைவோர் தொழில் தொடங்க நிலம் கேட்டு விண்ணப்பித்தனர்.

ஒரு ஏக்கர் நிலம் |12.20 லட்சம் என சிட்கோ நிறுவனம் விலை நிர்ணயம் செய்தது. இது சந்தை மதிப்பைவிட கூடுதல் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் 10 சதவீத முன்பணத்தை தொழில் முனைவோர் செலுத்தினர். பின்னர் மேலும் |50 ஆயிரம் செலுத்தும்படி சிட்கோ நிறுவனம் கூறியது.

இதைத் தொடர்ந்து, சிறுதொழில் முனைவோரிடம் நேர்காணல் நடத்தி விரைவில் நிலம் வழங்கப்படும் என சிட்கோ பொது மேலாளர் அறிவித்தார்.

25.12.2008-ல் சிட்கோ நிறுவனம், தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு கடிதம் அனுப்பி வைத்தது. அக்கடித்தத்தில் ஒரு ஏக்கர் நிலம் |43,86,100 என குறிப்பிடப்பட்டிருந்ததால் விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நிலத்துக்கே மொத்த பணத்தையும் முதலீடு செய்துவிட்டால் எப்படி தொழிற்சாலை தொடங்குவது என்ற கேள்வி எழுந்தது.

இதைத் தொடர்ந்து சிறுதொழில் முனைவோர்கள் இணைந்து சங்கம் தொடங்கினர். சென்னை சிட்கோ நிறுவனத்துக்குச் சென்று விலையை குறைக்க வலியுறுத்தினர். ஆனால் சிட்கோ நிறுவனம் இதற்கு சம்மதிக்கவில்லை. 12.11.2009-க்குள் |43,86,100 பணம் செலுத்தவில்லை என்றால் நிலம் ஒதுக்கீடு செய்ய முடியாது. மேலும் கட்டிய 10 சதவீத பணத்தையும் இழக்க நேரிடும் என தொழில் முனைவோருக்கு கடிதம் அனுப்பியதாம்.

இதைத் தொடர்ந்து 26.11.2009-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், விலையை உயர்த்த வேண்டிய காரணம் கேட்டு கடிதம் அனுப்பினர். ஆனால் அதற்கு இதுவரை பதில் இல்லையாம். இதனால் தொழில் முனைவோர் சென்னை உயர்நீதிமன்றத்தில முறையீடு செய்துள்ளனர்.

இது குறித்து ஒசூர் ஹோஸ்டியா சங்கத் தலைவர் டாக்டர் ராமலிங்கம் கூறியது:

ஒரு ஏக்கர் நிலம் |43 லட்சம் என விலை நிர்ணயம் செய்தால், பல்வேறு திட்டங்களுக்காக விவசாயிகளிடம் அரசு வாங்கும் நிலத்துக்கும் |50 லட்சத்துக்கு மேல் வழங்க வேண்டி வரும். மேலும் ஒசூருக்கு அருகே ஒரு ஏக்கர் நிலம் தற்போது |15 லட்சத்துக்கு கிடைக்கும்போது சிட்கோ நிர்ணயித்துள்ள தொகை அதிகம் என்றார் அவர்.

மாற்றுத் தொழிற்பேட்டை?

போலுப்பள்ளி தொழிற்பேட்டைத் திட்டம் தாமதமாகி வரும் நிலையில், ஒசூர் சிறு தொழில் முனைவோர் சங்கத்தினர் புது தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டுறவு சங்கம் ஒன்றைத் தொடங்கி, ஒசூர் அருகே 100 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com