/

கிடப்பில் போடப்பட்ட முருகன் கோயில் ராஜகோபுரப் பணிகள்

திருத்தணி, பிப். 8: திருத்தணி முருகன் கோயிலுக்கு ரூ. 6 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 9 நிலை ராஜகோபுரப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதை விரைந்து முடிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:04 pm

ஜி. யோகானந்தம்

திருத்தணி, பிப். 8: திருத்தணி முருகன் கோயிலுக்கு ரூ. 6 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 9 நிலை ராஜகோபுரப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதை விரைந்து முடிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், பாண்டச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்கிருத்திகை திருவிழா, திருப்புகழ் திருப்படித் திருவிழா ஆகிய விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டுச் செல்கின்றனர்.

மேலும் மாதம்தோறும் வரும் கிருத்திகை நாள்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்பக் காவடி, மலர்க் காவடி, பன்னீர்க் காவடிகளுடன் வந்து முருகனை வழிபடுகின்றனர்.

ரூ. 6 கோடி மதிப்பில் ராஜகோபுர பணிகள்: இக்கோயிலில் தங்க விமானம் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதேபோல் கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மு. ஈஸ்வரப்பனின் முயற்சியால் ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு 123 அடி உயரம் கொண்ட 9 நிலை கோபுரம் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி ராஜகோபுர கட்டுமான பணிகளை அப்போதைய இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆர். பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள்: ராஜகோபுரத்தின் தரைத் தலமான 38 அடி உயரத்துக்கு மட்டும் சென்ற ஆண்டு கோபுரம் கட்டிமுடிக்கப்பட்டது. அதன் பின்னர் சட்டப்பேரவைத தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ராஜகோபுர பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்கப்பட வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் ராஜகோபுர பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

10-ம் தேதிக்கு பிறகு பணிகள் தொடங்கும்: இதுகுறித்து திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் ந. தனபால் கூறுகையில், "நான் இணை ஆணையராக பொறுப்பேற்ற பிறகு கோயிலில் படிப்படியாக அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ள ராஜகோபுர பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

ராஜகோபுர பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று ஆணையர் உறுதி கூறியுள்ளார். ராஜகோபுரப் பணிகள் இம்மாதம் 10-ம் தேதிப் பிறகு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.