/

கட்டி முடித்தும் திறக்கப்படாத காவல் நிலையக் கட்டடம்

திருத்தணி, பிப். 15: பள்ளிப்பட்டு அருகே ரூ.36 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட காவல் நிலையத்தைத் திறக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிப்பட

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:12 pm

ஜி. யோகானந்தம்

திருத்தணி, பிப். 15: பள்ளிப்பட்டு அருகே ரூ.36 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட காவல் நிலையத்தைத் திறக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளிப்பட்டு தாலுக்கா ஆர்.கே.பேட்டையில் கடந்த 1961-ம் ஆண்டு காவல் நிலையம் தொடங்கப்பட்டது. சோளிங்கர் - பள்ளிப்பட்டு சாலை ஆர்.பேட்டை சந்திப்பில் இந்த காவல் நிலையம் அமைந்துள்ளது.

இங்கு விளக்கணாம்புடி புதூர், அம்மையார்குப்பம், ராஜாநகரம், கதன்நகரம்,வெள்ளாத்தூர், ஸ்ரீ காளிகாபுரம், வங்கனூர், எஸ்.வி.ஜி.புரம், கொண்டாபுரம், வங்குபட்டு, வேலன் கண்டிகை உள்ளிட்ட 38 ஊராட்சிகளில் உள்ள 92 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பல்வேறு பிரச்சனைக்கள் குறித்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கின்றனர்.

இந்த காவல் நிலையம் முதலில் சாலை ஓரத்தில் இடநெருக்கடியில் செயல்பட்டு வந்ததால் போலீஸாசார் மற்றும் விசாரணைக்கு வரும் குற்றவாளிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையம் கடந்த 1997-ம் ஆண்டு ஆர்.கே.பேட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகில் இருந்த வெள்ளாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த கட்டடமும் பழுதடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையல் இருந்தது. மேலும் மழை காலங்களில் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிவதால் காவல் நிலையத்தில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் நனைந்து வீணாகி வந்தது. மேலும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரும் ஓய்வு எடுக்க ஒரு அறைகூட கூடுதலாக காவல் நிலையத்தில் இல்லை.

இதையடுத்து ஆர்.கே.பேட்டை போலீசார், புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு பொதுப்பணித்துறையினர் மூலம் ஆர்.கே.பேட்டையில் காவல் நிலையம் கட்டுவதற்கு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 2 அடுக்கு காவல் நிலையம் கட்டடம் கட்டுமானப் பணி முடித்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை காவல் நிலையம் திறக்கப்படவில்லை.

இதனால் ஆர்.கே.பேட்டை போலீசார் பழுதடைந்த கட்டடத்திலேயே அச்சத்துடன் தினமும் பணிபுரிந்து வருகின்றனர். எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.