/

அடிப்படை வசதிகளற்ற பொன்பாடி ரயில் நிலையம்

திருத்தணி, ஜன. 31: பொன்பாடி ரயில் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால், பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:56 pm

ஜி. யோகானந்தம்

திருத்தணி, ஜன. 31: பொன்பாடி ரயில் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால், பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு ஆகிய 2 ஒன்றியங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் வியாபாரிகள், பொன்பாடி ரயில் நிலையத்துக்கு வருகின்றனர்.

 இவர்கள் இங்கிருந்து, ரயில்கள் மூலம், சென்னை சென்டரல், திருவள்ளூர், திருப்பதி, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்று வருகின்றனர். பொன்பாடியில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ரயில் நிலையத்தில் இதுவரை பிளாட்பாரம் அமைக்கப்படவில்லை. ரயில் நிலையத்தில் 3 தரை பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளன.

 இந்த பிளாட்பாரங்களில் பயணிகள் நிற்பதற்கு நிழற்குடை உண்டு. ஆனால் உட்காருவதற்கு நாற்காலிகள் இல்லை. பிளாட்பாரங்களில் குடிநீர் வசதி இல்லை. குறிப்பாக, கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி இல்லை. ரயில்வே நிலையத்தில் ஒரே இடத்தில் மட்டும் தண்ணீர் வருகிறது. மற்ற தரை பிளாட்பாரங்களில் குடிநீர் குழாய்கள் இதுவரை அமைக்கப்படவில்லை.

 அதே போல், பிளாட்பாரங்களில் போதிய மின் விளக்குகள் இல்லை. கழிப்பிடத்தில் தண்ணீர் இல்லாததால் ரயில் பயணிகள் அதை பயன்படுதுவதில்லை. இதனால் தற்போது கழிப்பிடம் மூடியே கிடக்கிறது. கழிப்பிடத்தைச் சுற்றிலும் முள் புதர்கள் மண்டி கிடக்கின்றன. ரயில் நிலையத்தில் ஒரே ஒரு டிக்கெட் கவுன்ட்டர் மட்டுமே செயல்படுகிறது. இந்த கவுன்டரில் மாதத்தில் முதல் வாரத்தில் பயணிகள் டிக்கெட் மற்றும் மாதந்திர சீசன் டிக்கெட் எடுக்க கடும் அவதிப்படுகின்றனர்.

 சென்னை சென்ட்ரல் வரை செல்லும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய, அதிக அளவில் பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் நிற்கின்றனர். ஆனால், சரியான நேரத்தில் பயணிகள் டிக்கெட் வாங்க முடியாமல் ரயிலை தவற விடுகின்றனர். இதனால் திருத்தணி ரயில் நிலையம் சென்று மின்சார ரயிலில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

 இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், "ரயில்நிலையம் திறந்த நாளிலில் இருந்து இதுவரை பிளாட்பாரம் அமைக்கப்படவில்லை. இதனால் ரயில் இருந்து இறங்கும்போது சிலர் படியில் கால் தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பொன்பாடி ரயில் நிலையத்தைச் சுற்றிலும் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கூலி வேலைக்காக திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் ஆவடி, சென்னை ஆகிய பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.

 இவர்கள் மேற்கண்ட ஊர்களுக்கு மின்சார ரயில் பயணம் செய்ய திருத்தணிக்குச் சென்று அங்கிருந்த அந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. சென்னையில் இருந்து திருத்தணி வரை வரும் மின்சார ரயிலை பொன்பாடி வரை நீட்டிக்க வேண்டும் என நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் ரயில்வே துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயில்வே துறை இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.