இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில், அமெரிக்கா கொண்டு வரும் போர்க் குற்றம், இனப் படுகொலை தொடர்பான தீர்மானங்களை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை அந்தக் கூட்டமைப்பின் தலைவர் பி.பரமசிவம் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடந்த உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவம், லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்றது.
இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை கொடூரமாக இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
இந்தப் போர்க் குற்றங்களை ஆராய்ந்து அறிக்கை வெளியிட, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இலங்கை அதிபர் ராஜபட்ச மீது போர்க் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தனித் தமிழ் ஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டமைப்பு மாநாட்டு வளாகம் முன்பு கூடி மார்ச் 4ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், போர்க் குற்றம், இனப் படுகொலை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியும் அன்று (மார்ச் 4) நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









