முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக திமுக மாநில மகளிர் தொண்டரணி செயலர் காரல்மார்க்ஸ் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் குறிஞ்சி தெருவைச் சேர்ந்தவர் காரல்மார்க்ஸ். இவர் திமுக மாநில மகளிர் தொண்டரணி செயலராக உள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 19-ஆம் தேதி நடைபெற்ற திமுக தலைமை நிலையப் பேச்சாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற காரல்மார்க்ஸ் தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினாராம்.
இதுதொடர்பாக, காரல்மார்க்ஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் வழக்குரைஞர் செல்வக்குமார் புகார் செய்தார். பின்னர், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் செல்வக்குமார் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தும்படி, தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, காரல்மார்க்ஸ் மீது 124 (ஏ), 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் சிவ. பாஸ்கர் தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை காரல்மார்க்ஸ் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








