அயோத்தியில் மசூதி கட்ட அனுமதிக்க மாட்டோம்

ஸ்ரீராம ஜென்ம பூமி அமைந்துள்ள அயோத்தி மாநகரில் எந்த இடத்திலும் மசூதி கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று சென்னையில் நடைபெற்ற ஹிந்து துறவியர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ஸ்ரீராம ஜென்ம பூமி அமைந்துள்ள அயோத்தி மாநகரில் எந்த இடத்திலும் மசூதி கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று சென்னையில் நடைபெற்ற ஹிந்து துறவியர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் சென்னை மகாலிங்கபுரத்தில் ஹிந்து துறவியர்கள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர், விசுவ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் அசோக் சிங்கல், சுவாமி தயானந்த சரஸ்வதி, ஊரன் அடிகள், ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

காலை 8.45 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றின் விவரம்: அயோத்தி மாநகரில் ஸ்ரீராமர் பிறந்த இடத்துக்கு அருகில் மசூதி கட்டுவதற்கு நிலம் வழங்க மத்திய அரசு முயற்சி செய்வதாகத் தெரிகிறது. சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்பதால், அயோத்தி மாநகரில் எந்த இடத்திலும் மசூதியோ பிற மதங்களின் வழிபாட்டு கட்டடங்களையோ கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. ஸ்ரீராம ஜென்ம பூமியைச் சுற்றி அரசு கையகப்படுத்தியுள்ள நிலம் முழுவதையும் ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

பசு வதை தடைச் சட்டம்: தமிழகத்தில் நாள்தோறும் பசுக்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அண்டை மாநிலங்களுக்கு சட்ட விரோதமாக பசுக்கள் லாரிகளில் கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றன. இது தடுக்கப்பட வேண்டும். ஆலயங்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பசுக்களை பராமரிக்க ஹிந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஆங்காங்கே பசு மடங்களை நிறுவ வேண்டும். பசுவதையைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்.

ஒற்றுமையை வலியுறுத்தி பிரசாரம்: ஹிந்துக்களிடம் மோதலை ஏற்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் வேலையில் சில சக்திகள் ஈடுபட்டுள்ளன. எனவே, ஜாதி மோதல்களைத் தவிர்த்து ஜாதி ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமை இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் துறவியர்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.

மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும், புனித நதிகளை தூய்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள ஆலயங்களை ஹிந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து விடுவித்து ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், ஆச்சார்யர்கள் கொண்ட தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com