கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குநருக்கு மிரட்டல் கடிதம்

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த கடிதம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Updated on
1 min read

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த கடிதம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் அணு உலையில் ஜனவரி 15-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டக் குழுவினர் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வளாக இயக்குநரான ஆர்.எஸ். சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து மர்ம கடிதம் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணுமின் நிலைய இயக்குநர் பெயருக்கு எழுதப்பட்ட அந்த கடிதம் கடந்த 3-ம் தேதி வந்து சேர்ந்துள்ளது. சென்னை மவுன்ட் ரோடு அஞ்சல் நிலைய பகுதியில் இருந்து கடந்த 31-ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், மூன்று அடுக்கு அல்லது நான்கு அடுக்கு பாதுகாப்பு இருந்தால் என்ன? உங்களைக் காப்பாற்ற அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ வரப் போவதில்லை. சொந்த ஊருக்கு போய்விடுங்கள். இல்லையெனில் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் வெட்டிக் கடலில் வீசிவிடுவோம். ஊரைப் பகைத்தால் வேருடன் கெடும் என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் அனுப்புநர் முகவரி எதுவும் இல்லை. மக்கள் நண்பன் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

இந்த மிரட்டல் கடிதம் குறித்து அணுமின் நிலைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் கூடங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து அணுமின் நிலையம் மற்றும் அங்கு பணியாற்றும் அதிகாரிகள், விஞ்ஞானிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

போராட்டக்குழு மறுப்பு: இது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் கூறியதாவது: அணுமின் நிலைய அதிகாரிகளுக்கு வந்துள்ளதாகக் கூறப்படும் மிரட்டல் கடிதத்திற்கும் எங்களுக்கும், எங்கள் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. நாங்கள் அணு உலைக்கு எதிராக கடந்த 510 நாள்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

எங்கள் போராட்டத்தில் இதுவரை துளியும் வன்முறை நிகழ்ந்ததில்லை.

இந்நிலையில் காவல் துறை அதிகாரிகள் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை மறைக்க வேண்டுமென்றே இதுபோன்ற வழக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com