ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்ததடுத்து விபத்து: மூவர் பலி, 10 பேர் காயம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட மூன்று விபத்துக்களில் மூவர் உயிரிழந்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட மூன்று விபத்துக்களில் மூவர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர்.
மதுரை, தெப்பக்குளம், ஐதாவதநல்லூர், யாதவர் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ஜெயமணி (37). இவர் பழைய மருந்து பாட்டில்களை வாங்கி சுத்தப்படுத்தி மறுவிற்பனை செய்து வரும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குங்குமதேவி (30). மகன் ரித்தீஸ் (7), மகள் ரித்திகா மற்றும் இவரது தங்கை சுபசெல்வி உறவினர் முத்துக்குமார் உள்ளிட்ட 7 பேருடன் ஒரு காரில் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாவாக வெள்ளிக்கிழமை ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்கள். பின்னர் குற்றாலம் வந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளார்கள். காரை ஜெயமணி ஓட்டி வந்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, ஜெயமணி தூங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வண்டி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் காரில் வந்த குங்குமதேவி மற்றும் ரித்தீஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காமுற்ற ஜெயமணி, ரித்திகா, முத்துக்குமார் ஆகியோர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
6 பேர் காயம்: சேலத்தைச் சேர்ந்த 12 பேர் ஒரு டாடா சுமோ காரில் குற்றாலம் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அழகாபுரியை அடுத்து கார் சென்று கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் காரில் வந்த 6 பேர் காயம் அடைந்தனர்.
ஒருவர் சாவு: திருநெல்வேலி மாவட்டம், டி.ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் த.இளையபெருமாள் நாடார் (62). இவர் கும்பகோணத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அழகாபுரி அருகே பேருந்து ஒரு உணவகத்தில் நின்றுள்ளது. அப்போது இளையபெருமாள் சிறுநீர் கழிப்பதற்காக சாலையைக் கடந்து எதிரே சென்றுள்ளார். திரும்ப பேருந்துக்கு வருவதற்காக சாலையைக் கடக்கும் போது, லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இளையபெருமாள் நாடார் உயிரிழந்தார். நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மூன்று சம்பவங்களும் அடுத்தடுத்து நடைபெற்றதால் இப் பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...