மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிறைவடைந்து, ஆட்சித் தலைவர் கீழே இறங்கி வந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர், லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த காளி என்பவரின் மனைவி ஜக்கம்மாள் என்ற மூதாட்டி தனது மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமன் விவரம் கேட்டார். அப்போது அவர் கூறியதாவது: எங்களது ஊரில் 1.75 ஏக்கர் நிலம் எங்களுக்கு உண்டு. இதனை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் விற்க திட்டமிட்டு ரூ.10 லட்சம் கிரையம் பேசி, ரூ.1 லட்சம் முன்பணம் பெற்றோம். பின்னர் பத்திரப் பதிவிற்கு அந்த நபர் அழைத்துச் சென்றார். அங்கு பத்திரங்களில் கையொப்பம் கேட்டார். மீதி பணம் ரூ.9 லட்சத்தை விரைவில் தருவதாயும், ஆனால் பத்திரம் முடித்துத் தரவும் கூறினார். ஆனால் எனது கணவர் காளி கையொப்பமிட மறுத்துவிட்டு வந்துவிட்டார். சில நாட்களில் உடல் சுகவீனம் காரணமாக காளி இறந்துவிட்டார். இந்நிலையில் ரூ.1 லட்சத்தை முன்பணம் வாங்கிய நபரிடம் கொடுத்துவிட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டேன். ஆனால் அந்த நபர் மேலும் ரூ.35 ஆயிரம் செலவு செய்துவிட்டதாயும், அதனைக் கேட்டும் பல வகைகளில் தொல்லை கொடுத்து வருவதாய் கூறினார்.