2001 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னர், அதிமுகவில் விலகியிருந்த சில தலைவர்கள் ஜாதிக் கட்சிகளைத் தொடங்கினர். முதலியார் சமூகத்தை முன்னிறுத்தி முன்னாள் எம்.பி. ஏ.சி. சண்முகம் தொடங்கிய புதிய நீதிக் கட்சி, யாதவர் சமூகத்தை முன்னிறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.கண்ணப்பன் (இப்போது ராஜ.கண்ணப்பன்) தொடங்கிய மக்கள் தமிழ் தேசம், முத்தரையர் சமூகத்தை முன்னிறுத்தி முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தொடங்கிய தமிழர் பூமி ஆகிய கட்சிகளுக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. ஆனால், ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. இவர்களில் கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் தங்களது கட்சிகளைக் கலைத்துவிட்டு அதிமுகவிலேயே இணைந்துவிட்டனர்.