சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை ஏற்று செயல்பட சசிகலா சம்மதம் தந்துள்ளதாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, உடல்நிலைக் குறைவு காரணமாக டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளாரை தேர்வு செய்யும் பொருட்டு அதிமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை நடைபெற்றது. இக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தொடர்ந்து போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவை சந்தித்து தீர்மான நகலை பன்னீர்செல்வமும், தம்பிதுரையும் வழங்கினார்கள். அவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை ஏற்று செயல்பட சசிகலா சம்மதம் தந்துள்ளதாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பின்னர் நடந்த செய்தியாளர்ட் சந்திப்பில் தெரிவித்தார்.