சென்னை: வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் மனுக்கள் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் வரும் 19-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி ஆகியவை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாயன்று தொடங்கியது. மூன்று தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நேற்றுதான் கடைசி நாளாகும்.
இதனைத் தொடர்ந்து வேட்பு மனுபரிசீலனை இன்று நடைபெற்றது. மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க, தி.மு.க வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு ஏற்று கொள்ளப்பட்டன.
இது போல் புதுச்சேரி நெல்லிதோப்பு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், புதுச்சேரி முதல்வருமான நாராயணசாமியின் வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.