சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை அரசிடம் இருந்து பெறுமாறு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை குறித்த பலவித வதந்திகள் வெளியே பரப்பப்பட்டன.
இந்நிலையில் சமூகநல ஆர்வலர் 'டிராபிக் ராமசாமி' சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தமிழக அரசு தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் அமைச்சரவை சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஜெயலலிதா நடத்தியதாக கூறப்படும் ஆலோசனைகள் பற்றிய புகைப்படங்களையும் வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள தமிழக மக்கள் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
எனவே இந்த விவகாரம் தொடர்பாக என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று உரிய தகவல்களை தமிழக அரசிடம் ஆலோசித்து பெற்று வருமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.