தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

டி.டி.வி. தினகரனை தில்லி போலீஸார் கைது செய்ய வாய்ப்பு?

இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதற்காக லஞ்சம் கொடுத்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து அதிமுக துணைப்பொதுச் செயலாளர்

News image
Updated On :17 ஏப்ரல் 2017, 4:50 am

புதுதில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதற்காக லஞ்சம் கொடுத்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக, சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணி என இரண்டாக உடைந்தது. இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. இதில் இரண்டு அணியும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்குச் சொந்தம் கொண்டாடி வந்தன.

இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இரண்டு அணிகளும் அந்த சின்னத்தையும் கட்சிப்பெயரையும் பயன்படுத்த தடைவிதித்தது. சசிகலா அணி அதிமுக அம்மா அணி எனவும், பன்னீர்செல்வம் அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி எனவும் இடைத் தேர்தலில் போட்டியிட்டன.

ஆனால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்தைப் பெற போட்டிப்போட்டு வந்தன. சமீபத்தில்தான் சசிகலா அணி தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய 8 வார அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது.

இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்பது குறித்து தேர்தல் கமிஷன் இன்று (ஏப்ரல் 17) விசாரணை நடத்த உள்ளது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற 60 கோடி ரூபாய் பேரம் பேசியதாக தகவல் வெளியானதும், இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெற்கு தில்லியில் உள்ள ஹாட்டல் ஒன்றில் சோதனை நடத்தியதில் ஹாட்டல் அறையிலிருந்து ரூ.1 கோடியும், தரகர் சுகேஷ் சந்திராவிடம் இருந்து ரூ.30 லட்சமும் பறிமுதல் செய்துள்ளனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

இரட்டை இலை சின்னம் பெற்று தருவதற்காக ரூ.1.5 கோடி வாங்கியதாக சந்திரா வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் சிலரின் பெயர்களையும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தில்லியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சந்திரசேகர் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது தில்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், டி.டி.வி. தினகரனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் டி.டி.வி. தினகரனை கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.