தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி: ஓ.பி.எஸ் பெருமித பேட்டி!

அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை நீக்குவது என்று அதிமுக அம்மா அணி முடிவெடுத்திருப்பது எங்களணியின் தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி ...
தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி: ஓ.பி.எஸ் பெருமித பேட்டி!

சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை நீக்குவது என்று அதிமுக அம்மா அணி முடிவெடுத்திருப்பது எங்களணியின் தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்று முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி தலைவருமான ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை நீக்குவது என்று அதிமுக அம்மா அணியினர் நேற்று இரவு முடிவெடுத்து அறிவித்துள்ளனர் .அதே போல அதிமுகவிலிருந்து நான் நேற்றே ஒதுங்கி விட்டேன் என்று அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று காலை பேட்டியளித்துள்ளார்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி தலைவருமான ஓ.பி.எஸ் , சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

முன்னாள்முதல்வர் எம்.ஜி,.ஆர் அவர்களால் மக்கள் இயக்கமாக அதிமுக துவக்கப்பட்டது. அதை ஜெயலலிதா மேலும் உறுதிப்படுத்தி வலிமையான இயக்கமாக மாற்றினார். அப்படிப்பட்ட மக்கள் இயக்கமான, தொண்டர் இயக்கமான அதிமுக, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தின் பிடிக்குள் சென்று விடக் கூடாது என்பதற்காகத்தான் எங்கள் அணியின் தர்ம யுத்தம் தொடங்கியது. 

தற்பொழுது அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை நீக்குவது என்று அதிமுக அம்மா அணி முடிவெடுத்திருப்பது எங்களணியின் தர்ம யுத்தகத்திற்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்.

இந்த யுத்தமானது பொது மக்களின் விருப்பத்திற்காக, தொண்டர்களின் எண்ணத்திற்காக சரியான பாதையில் நடைபெறும்.

இரண்டு அணிகளும் ஒன்று சேர்வதற்கான பேச்சு வார்த்தைகள் விரைவில் முறையாக தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com