டி.டி.வி.தினகரனால் தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கட்சிப் பொறுப்பை ஏற்க மாட்டேன் என கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் முகநூலில் தெரிவித்துள்ளதாவது:
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், டி.டி.வி.தினகரன் தன்னிச்சையாக எனக்கு கழக மகளிரணி இணைச் செயலர் பொறுப்பு அறிவித்துள்ளதாக அறிகிறேன்.
கழகமும், ஆட்சியும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த அறிவிப்பு குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்பது தொண்டர்களின் கருத்து. எனவே இந்தப் பதவியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மேலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி தலைமையின் கீழ் உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.