/

ஸ்டாலினின் ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:35 pm

DIN

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடம் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, நான் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட எந்த அரசு பதவியிலும் இல்லாதபோது தொழில் தொடங்குவதற்காக 2007 -ஆம் ஆண்டு வாங்கப்பட்ட நிலம்.
முறையாக விற்பனை வரி, வருமான வரி... அந்த இடத்தில் சாலை போடுவதற்கும், கட்டடங்கள் கட்டுவதற்கும் தேவையான ஜல்லிக்கல் உற்பத்தி செய்யும் தொழில் தொடங்கப்பட்டது. இந்தத் தொழில் 2007-ஆம் ஆண்டு என் பெயரில் தொடங்கப்பட்டது. சட்ட விதிகளுக்குட்பட்டு கனிம வளம் , சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்துத் துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறப்பட்டு இயங்கி வருகிறது. இதில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு முறையான விற்பனை வரி, வருமான வரி உள்ளிட்டவை செலுத்தப்பட்டு வருகின்றன. நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற உடன் குடும்ப நிறுவனங்கள் என் பெயரில் இயங்கக் கூடாது என்பதற்காக, எனது தந்தைக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளேன். என் தந்தைதான் அவற்றை நிர்வகித்து வருகிறார்.
செய்திகளில் வெளியானது போல சுப்பையா என்பவர் எனது சமையல்காரர் இல்லை. அவர் எங்கள் நிறுவனத்தில் உதவி ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். சுப்பையா என்ற பெயரில் எனக்கு சமையல்காரரோ, உதவியாளரோ இல்லை.
ஏப்ரல் 7 -ஆம் தேதி என்னிடமும், என்னைச் சார்ந்தவர்களிடமும் வருமான வரி சோதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. 3 முறையும் நான் வருமான வரித் துறை அலுவலகத்துக்குச் சென்று விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன்.
குட்கா குறித்து...குட்கா விவகாரத்தில் சொல்லப்படும் மாதவராவ் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. இது அடிப்படை ஆதாரமற்ற, அரசியல் காழ்ப்புணர்சியால் புனையப்பட்ட குற்றச்சாட்டு. இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன்.
தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் என் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளைசுமத்தி வருவது கண்டிக்கத்தக்கது. இந்த விமர்சனங்களைத் தாண்டி நான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. காலம் தனது கணக்கை சரியாக முடிக்கும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.