/

என்னை நீக்க அதிகாரம் இல்லை

என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று என்றார் டி.டி.வி. தினகரன்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:38 pm

DIN

என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று என்றார் டி.டி.வி. தினகரன்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது அதிமுக என்ற பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தொடர்கிறது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக தலைமைச் செயலகம் என உள்ளது. இது, தேர்தல் ஆணைய விதிகளை மீறிய செயல். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் யாராவது புகார் செய்தால், அறிக்கையில் கையெழுத்திட்ட முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அடுத்து மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால், கட்சியைப் பலப்படுத்துவதற்கும், தொண்டர்களை ஊக்குவிப்பதற்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். ஆனால், இவர்கள் அச்சத்தில் அத்துமீறி செயல்படுகின்றனர். தவறாகத் திரித்து அறிக்கையை வெளியிடுகின்றனர்.
திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராகப் பொதுச் செயலர் (சசிகலா) நியமனம் செய்தார். அதை ஒப்புக் கொள்ளும்போது, பொதுச் செயலரால் நியமனம் செய்யப்பட்ட அனைத்து பதவிகளும் செல்லுபடியாகும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது, பொதுச் செயலரால் நியமனம் செய்யப்பட்ட டி.டி.வி. தினகரனாகிய நான் துணைப் பொதுச் செயலராகத் தொடருவதில் எந்தத் தடையும் இல்லை. எனக்குத் தடைப் போட்டு நிறுத்துகிற அதிகாரம் பொதுச் செயலருக்கு மட்டுமே உள்ளது, வேறு யாருக்கும் இல்லை.
கட்சியில் துணைப் பொதுச் செயலர், அமைப்புச் செயலர், தலைமைக் கழக நிர்வாகிகள் போன்ற நியமனப் பதவிகளில் யாரை வேண்டுமானாலும் நியமிக்கும் அதிகாரம் பொதுச் செயலருக்கு உண்டு. அந்த அதிகாரத்தின் அடிப்படையில்தான் பொதுச் செயலர் என்னைத் துணைப் பொதுச் செயலராக நியமித்தார்.
பொதுச் செயலர் சார்பில் செயல்படும் நான், சரியாகச் செயல்படாத கட்சி நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும், புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்வதற்கும் சட்ட விதிகளுக்கு உள்பட்டு எனக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் புதிய நிர்வாகிகளை நியமித்தேன்.
கட்சியின் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்பட்டு, தங்களுக்குப் பதவி வழங்கியவர்களை மறந்துவிட்டு, சுயநலத்துக்காக எதிரிகளுடன் கைகோத்துக் கொண்டு, பதவியில் ஒட்டிக் கொள்வதற்காகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியமும், மன வலிமையும், தொண்டர்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது. கட்சிக்கு விரோதமாகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுச் செயலர் சார்பில் துணைப் பொதுச் செயலராகிய எனக்கு உள்ளது. தவறு செய்தவர்கள் திருந்துவர் அல்லது திருத்தப்படுவர். கட்சி ஒன்றுபட வேண்டும். கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் என்றார் தினகரன்.
அப்போது, தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, திருச்சி கிழக்குத் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.