/

சசிகலா நியமனம் செல்லாது: பன்னீர்செல்வம் அணி புதிய மனு

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புதிய மனு அளித்தனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:38 pm

DIN

அஇஅதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புதிய மனு ஒன்றை வெள்ளிக்கிழமை அளித்தனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கை வைத்தார். அதுபோல அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்தவர்களும் நரேந்திர மோடியைச் சந்தித்தனர். 

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அம்மா அணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், கட்சியில் எந்தப் பொறுப்பிலும் தொடர்ந்து 5 ஆண்டுகளாக இல்லாத காரணத்தால் டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அதிமுக-வின் இரு அணிகளும் இணைவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த சில நாட்களாகவே அதற்கான செயல்பாடுகளை இரு அணிகளும் துவக்கிவிட்டன. இதன் முதல் படியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், விரைவிலேயே சசிகலா நியமனமும் செல்லாது என அறிவிக்கப்பட்டு தினகரன் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் அதிமுக-வை விட்டு ஒதுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினர், சசிகலா நியமனத்தை எதிர்த்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புதிய மனு ஒன்றை வெள்ளிக்கிழமை அளித்தனர்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தினகரன் நீக்கம் தொடர்பான தீர்மானத்தின் நகலையும் அதனுடன் இணைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.