புது தில்லி: விலக்கு அளிக்கப்பட்டாலும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக மாணவர்களுக்காகத்தான், அரசு போராடி வருகிறது. +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும், எந்த மாணவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதே அரசின் எண்ணம். கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோருகிறோம். எங்களது கோரிக்கைக்கு ஒத்துழைத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நீட் தேர்வு விவகாரத்தில் எந்த தாமதமும் இல்லை. நடைமுறையில் ஏற்படும் பிரச்னைகள்தான் உள்ளன. சட்ட சிக்கல்கள் காரணமாகவே தாமதம் ஏற்படுகிறது. அதே சமயம், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் உள்ளது. இதில் தமிழகத்துக்கு எந்த பின்னடைவும் இல்லை. தமிழகத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம்.
நீட் தேர்வு விவகாரத்தில் பல்வேறு துறைகளின் ஆலோசனைப் பெற வேண்டி உள்ளது. ஓரிரு நாளில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.