சென்னை: நடைபெற்று வரும் ஆட்சி கலையாமல் இருக்க வேண்டுமானால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் காலில் வந்து விழ வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டிடிவி தினகரன் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனை நடந்து வருகிறது. அப்பொழுது நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கூட்டு பொறுப்பு கொண்ட ஒரு அமைச்சரவையில் உறுப்பினராக உள்ளவர் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால் அவர் தொடர்ந்து தடித்த வார்த்தைகளைப் பேசி வருகிறார். அதேநேரம் டிடிவி தினகரன் ஆதரவாளர்களை அவர் துரோகி என்று விமர்சிப்பது கண்டனத்திற்குரியது.
அதேநேரம் பதவி எதுவும் இல்லாத நிலையில் ஜெயக்குமார் இருந்த பொழுது அவருக்கு முதலில் மீனவர் அணி செயலாளர் பதவி, பின்னர் அமைச்சர் பதவி பெற்றுத் தர காரணமாக இருந்தது தினகரன்தான். அதனை அவர் மறந்து விடக் கூடாது
அதிமுக அணிகள் இணைப்புக்கு எதிராக நாங்கள் எந்த வாக்குமூலமும் கொடுக்கவில்லை. எது நடக்குமோ அதுதான் நடக்கும். துணைபொதுச் செயலாளர் தினகரனை கட்சியினை விட்டு நீக்குவதற்கு யாரும் உரிமையில்லை. மொத்தம் உள்ள 122 சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கள் பக்கம்தான் உள்ளனர்.
இந்த ஆட்சியை கவிழ்க்க எங்களால் முடியும் என்பது அவர்களுக்குக்கு தெரியும். அவ்வாறு நடக்க கூடாது என்றால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் காலில் வந்து விழ வேண்டும்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.