சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களிடம் ஐ.ஜி.செந்தாமரை கண்ணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூவத்தூரில் உள்ள உல்லாச விடுதியில் இருந்து தப்பி வந்து முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்த அதிமுகவை சேர்ந்த மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் இன்று காலை தான் உட்பட அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கடத்தி கூவத்தூரில் உள்ள உல்லாச விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து காவல்துறை ஐ.ஜி செந்தாமரை கண்ணன். காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி ஆகியோர் அடங்கிய போலீஸ் குழுவானது கூவத்தூர் உல்லாச விடுதியில் நுழைந்து விசாரணை நடத்தியது.
அவர்களுடன் ககாணிப்பாளர் விக்டர் மற்றும் மூன்று கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்களும் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இதனிடையே அங்கே இருக்கக் கூடிய எம்.எல்.ஏ க்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் அங்கு வந்துள்ளார். அங்குள்ள எம்.எல்.ஏ க்களுடன் போலீசார் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதியாக அங்கே உள்ள வெளியாட்கள் கூவத்தூரில் இருந்து வெளியேற்றப்படுகின்றன, மேலும் அதிரடிப்படை போலீசாரும் கணிசமான அளவில் அங்கு குவிக்கபட்டுள்ளனர்.