சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் அதிமுக பொதுச் செயலர் என்ற புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட சசிகலா, புதிய பொறுப்பும், அதனால் கிடைத்த மரியாதை காரணமாகவும், உற்சாகத்தோடு கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
திமுக செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின், ஜல்லிக்கட்டுத் தொடர்பாகக் கூறிய கருத்துக்களுக்கு மறுப்புக் கூறி அதிமுக பொதுச் செயலர் சசிகலா நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு திமுக-காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்றும் இந்தப் பிரச்னையில் உண்மைகளை குழிதோண்டி புதைத்து விட்டு மக்களை மு.க.ஸ்டாலின் திசை திருப்புகிறார் என்றும் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா குற்றம்சாட்டினார்.
அரசியல் ரீதியான முதல் அறிக்கை
அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள வி.கே.சசிகலா, அரசியல் ரீதியாக திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தியது, பதவியேற்பு நிகழ்ச்சியில் பேச்சு, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு என அவரது பெயரில் கட்சி சார்ந்த அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள், திமுக செய்யத் தவறிய விஷயங்கள் என அரசியல் ரீதியிலான தனது முதல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.
முன்னதாக, தலைமைச் செயகலத்தில் அதிமுக நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து பேசி வருகிறார் சசிகலா. அந்தச் சந்திப்பின் முதல் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. கூட்டத்தில், அவர் பேசியது:- ஜெயலலிதா இல்லாத இந்த காலக்கட்டத்தில் கட்சியை ஒருங்கிணைத்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மறைவை விமர்சனங்கள் செய்து அரசியலில் ஆதாயம் தேட சிலர் நினைக்கிறார்கள்.
அவர்களது சூழ்ச்சியை-சூட்சுமத்தை ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். ஜெயலலிதா ஏற்றிய தீபத்தை அணையாமல் காக்க வேண்டும். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதிமுக பொதுச் செயலரானதும் கண்ணீர் மல்க தனது உரையைத் தொடங்கிய சசிகலா, மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சித் தலைமையாக தனது முதல் உரை நேற்று ஆற்றியுள்ளார்.
அதே போல, படுகொலை செய்யப்பட்ட புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவர் வி.எம்.சி.சிவக்குமார் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலர் சசிகலா கட்செவி அஞ்சல் மூலம் இரங்கல் செய்தி அனுப்பினார். அதில், இந்தப் படுகொலைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
முதல் அறிக்கை, முதல் பேச்சு என மிகவும் திறமையாக சூழ்நிலைகளைக் கையாள்கிறார் சசிகலா.