மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு "பாரத ரத்னா' வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு "பாரத ரத்னா' விருது வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Updated on
1 min read

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு "பாரத ரத்னா' விருது வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுநல வழக்குகளுக்கான மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஐந்து முறை முதல்வராகப் பதவி வகித்தவர். திரைப்படத் துறையில், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
அதைத்தொடர்ந்து, அரசியலில் ஈடுபட்ட அவரின் குறிக்கோள் ஏழை மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பதாகும். அவரது ஆட்சி காலத்தில், மலிவு விலையில் அம்மா உணவகம், மாணவர்களுக்கு இலவசமடிக்கணினி, மாணவர்களுக்கு சைக்கிள் என பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்தார். தனது வாழ்நாள் முழுவதும் ஏழை மக்களுக்காக பாடுபட்ட அவருக்கு, நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருதை வழங்க வேண்டும். இதுதொடர்பாக, கடந்த டிசம்பர் 15 -ஆம் தேதி மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன். இந்த மனுவுக்கு, இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, "பாரத ரத்னா' விருது வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
யார், யாருக்கு "பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என முடிவு செய்வது, மத்திய அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டதாகும். அவருக்குத் தான் விருது வழங்க வேண்டும், இவருக்குத் தான் வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவோ, உத்தரவு பிறப்பிக்கவோ இயலாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com