/

தமிழக அரசை முடிவுக்குக் கொண்டு வர திமுக தயங்காது: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசை முடிவுக்குக் கொண்டுவர திமுக தயங்காது என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:33 pm

DIN

தமிழக அரசை முடிவுக்குக் கொண்டுவர திமுக தயங்காது என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நீர் ஆதாரங்களைத் தூர்வாரும் பணியில் திமுக அரசியல் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தூர்வாரும் பணிகள் திமுக ஆட்சியில்தான் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டன என்பதை மறைத்து இதுபோல அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து பொதுப் பணித்துறையில் உள்ள அதிகாரிகளிடமே அவர் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. ஆளுங்கட்சியாக இருந்தபோது மேற்கொண்ட தூர்வாரும் பணிகளை, இப்போது எதிர்க்கட்சியாகவும் திமுக தொடர்கிறது.
தமிழகத்தில் இப்போது ரூ. 100 கோடி மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் நடந்திருப்பதாகக் கூறும் முதல்வர், அந்தப் பணிகள் அதிமுகவினருக்கு வழங்கப்படவில்லை என்று நிரூபிக்க முடியுமா?
தூர்வாரும் பணிகளில் வண்டல் மண், சவுடு மண் விவசாயிகளுக்கு கொடுக்கப்படுகிறது என்கிறார். யார், யாருக்குக் கொடுக்கப்பட்டது? அந்த மணலை அள்ளிச் சென்றவர்களில் அதிமுகவினர் எத்தனை பேர் என்பதை நிரூபிக்க முடியுமா? இதுவரை நடைபெற்ற குடிமராமத்துப் பணிகள் குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா?
அதிமுக அரசால் தமிழகத்தின் வளர்ச்சியை சுமார் 20 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட அரசை முடிவுக்குக் கொண்டு வர, திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் தயங்காது. அதற்கான ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுகவை மிரட்டி விடலாம் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.