/

சென்னை சில்க்ஸ் நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டுள்ளது: அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னை சில்க்ஸ் நிறுவனம் கட்டிட விதிமீறலில் ஈடுபட்டுள்ளது என்று தமிழக ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:39 pm

DIN

சென்னை: சென்னை சில்க்ஸ் நிறுவனம் கட்டிட விதிமீறலில் ஈடுபட்டுள்ளது என்று தமிழக ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தின் காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது.

கட்டிட அமைப்பை பொருத்தவரை சென்னை சில்க்ஸ் நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. நான்கு தளங்கள்  கட்டுவதற்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளனர். ஒப்புதலுக்கு மாறாக தரை தளத்துடன் சேர்த்து எட்டு தளங்களை கட்டியுள்ளனர்.

எனவே ஒப்புதலுக்கு மாற்றாக கட்டப்பட்ட 5, 6 மற்றும் 7 ஆவது தளங்களை மாநகராட்சி சீல் வைத்தது. பின்னர் அவற்றை இடிக்கும் பணிகளை சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமம் துவங்கியது. ஆனால் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சாரபில்  நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்று விட்டனர். அதன் பின்னர் சீல் வைத்த தளங்கள் விடுவிக்கப்பட்டன. 

அத்துடன் குறிப்பிட தளங்களை இடிப்பதன் காரணமாக  கட்டிடத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படும் என்று சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் தெரிவித்தனர். எனவே இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது 

தற்பொழுது வரை கட்டிட நிறைவு சான்றிதழை அரசிடமிருந்து சென்னை சில்க்ஸ் நிறுவனம் பெறவில்லை.

அத்துடன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.