தினகரன் கட்சியை வழிநடத்த எம்.எல்.ஏக்கள் விரும்புகின்றனர்: நாஞ்சில் சம்பத்
கட்சியை தினகரன் வழிநடத்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் விரும்புவதாக அதிமுக அம்மா அணியின் நாஞ்சில் சம்பத் கூறினார்.
சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் இல்லத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறியது:
கட்சியை தினகரன் வழிநடத்த அதிமுக அம்மா அணி சட்டப்பேரவை உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் விரும்புகிறார்கள்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர் அறிவித்த பிறகு, தினகரன் தலைமையில் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் கூட்டி முடிவு செய்யப்படும். இரு அணிகளை இணைக்க ஓ.பன்னீர்செல்வம் அணி வைத்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேறாது. வா.மைத்ரேயன், ஸ்டாலின் ஆகியோர் கூறிவருவது போல் மறுதேர்தல் ஒரு போதும் நடக்காது. அப்படியே வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும். அமைச்சர் ஜெயக்குமார் தினகரன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவரின் தனிப்பட்ட கருத்து.
அமைச்சர்களின் கருத்து இல்லை: தினகரன் எப்போதும் வேண்டுமானாலும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்ல முடியும். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியால் அதிமுக தலைமை அலுவலகம் மூடபட்டது என்ற செய்தி வந்து விடக்கூடாது என்பதற்காகவே அங்கு தினகரன் செல்லாமல் இருக்கிறார்.